(ஜனாதிபதி முறையை ரத்துச்செய்ய இணங்குகிறேன் – மகிந்தவின் அதிரடியான விசேட அறிக்கை)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு தாம் இணங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை இன்றைய தினம் வெளியிட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றை மலினப்படுத்தி மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் உத்தேச அரசியல் அமைப்பு காணப்படுகின்றது.
அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பை வெளியிடுதல் என்பது அனைத்து திருத்தங்களையும் எதிர்ப்பதாகாது.
தற்போதைய அரசியல் அமைப்பில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்வதுடன், அரசியல் கட்சிகளின் பிரிவினைவாத அல்லது சமஸ்டி முறையிலான ஆட்சியை எதிர்க்கிறோம்.
19ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மட்டும் எத்தனை பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதேச சமூகமொன்று தேசிய ரீதியில் செயற்படுவதற்கான அவகாசம் இருக்க வேண்டும்.
எதிர்வரும் தேசிய தேர்தலின் போது அரசியல் அமைப்பு குறித்து யோசனைகளை முன்வைத்து மக்களிடம் ஆணையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் கோரி நிற்பதாக மஹிந்த ராஜபக்ச அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது வரை காலமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்தால் அது தேசிய பாதுகாப்பினை பாதிக்கும் என மஹிந்த தரப்பு கூறி வந்ததுடன், தற்போதைய நிறைவேற்று அதிகார முறையில் மஹிந்தவினால் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.