• Wed. Apr 8th, 2026

தேர்தல் வேண்டாம் என தீர்ப்பு கிடைத்ததும், பட்டாசு கொளுத்தும் ஒரே அரசியல் கட்சி ஐ.தே.க.வே

Byadmin

Dec 22, 2018

(தேர்தல் வேண்டாம் என தீர்ப்பு கிடைத்ததும், பட்டாசு கொளுத்தும் ஒரே அரசியல் கட்சி ஐ.தே.க.வே)

பொதுமக்கள் தம்முடன் இருப்பதாக ஊடக சந்திப்புகளில் பெருமை பேசும் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திலும் அமுனுகம இதனை கூறியுள்ளார்.
உடனடியாக தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை கொண்டு வந்தால், அதனை நிறைவேற்ற எதிர்க்கட்சி பூரண ஆதரவை வழங்கும்.
தேர்தல் வேண்டாம் என தீர்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைய பட்டாசு கொளுத்தும் ஒரே அரசியல் கட்சி ஐக்கிய தேசியக்கட்சியே.
ஒரு வேளை தேர்தல் நடைபெற்றால், தமக்கு கிடைக்கும் முடிவு எப்படி இருக்கும் என அறிந்துக்கொண்டுள்ளனர் என்பதால், ஐக்கிய தேசியக்கட்சியினர் அவ்வாறு நடந்துக்கொண்டனர். இதனால், ஐக்கிய தேசியக்கட்சி அப்படி நடந்துக்கொண்டமை எமக்கு ஆச்சரியமான விடயமல்ல.
கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்திருந்தால், தேர்தலை எதிர்கொள்ள அஞ்ச தேவையில்லை. தேர்தலுக்கு சென்று யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
கடந்த மே தினத்தில் பொதுமக்களால் நாங்கள் காலிமுகத்திடலை நிரப்பினோம். தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாட ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் காலிமுகத்திடலில் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் மக்கள் கலந்துக்கொண்டதை நாம் பார்த்தோம்.
அதேபோல் புதிய அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.
எதிர்காலத்தில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *