(“உங்களுக்கு சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.)
சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளதாகத் தெரிவித்து ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணம்
மோசடி செய்யப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவத்தமுனையில் இடம்பெற்றுள்ளது.
வட்ஸ்அப் மற்றும் ஈமெயிலுக்கு அனுப்பப்பட்டிருந்த தகவலை உண்மை என நம்பியே ஒருவர் இவ்வாறு தனது பணத்தை இழந்துள்ளார்.
ஹோட்டலில் தொழில் செய்யும் காவத்தமுனையைச் சேர்ந்த குறித்த இளைஞரின் கைத்தொலைபேசி வட்ஸ்அப்பிலும் அவரது மின்னஞ்சலுக்கும் (ஈமெயில்) சிலரால் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் குறித்த இளைஞருக்கு சர்வதேச சீட்டிழுப்பு மூலமாக பெருந்தொகை பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அதிகமான பணம் செலவிட வேண்டியிருப்பதால் ரூபா 5 இலட்சம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.
இதனை நம்பிய குறித்த இளைஞர், அவர்களால் தெரிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் அவர்கள் கோரிய தொகையை வைப்பிலிட்டுள்ளார். இதன் பின்னர் குறித்த நபர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேகமடைந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதனை அறிந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
–மெட்ரோ–