முட்டை உற்பத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதில்ஏற்பட்டுள்ள தடைகளால் வெகு விரைவில் முட்டை விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பானது, முட்டை விநியோகஸ்தர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் யாவும் மீண்டும் திறக்கப்படுமாயின் தேவையானளவு முட்டையை விநியோகிக்க முடியாது போகும் என்றும் தெரிவித்துள்ளனர். முட்டைகளை 21 நாள்கள் காலப்பகுதிக்குள் சிறந்த முறையில், வைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், குறித்த காலப்பகுதியில் முட்டை விற்பனையும் இடம்பெறுவது அவசியமாகும். அப்படியில்லையாயின் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாமல் போகுமெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டின் தற்போதைய நிலையில், முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, உற்பத்தி செலவு அதிகரிப்பால் கோழி இறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாதிருப்பதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோளத்தின் விலை கிலோவொன்று 55 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் கோழி இறைச்சி உற்பத்தியின் செலவில், 70 சதவீதம் கோழித் தீனிக்காக செலவழிக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் சோள இறக்குமதியை தடைசெய்த பின்னர், சோள விதையை பாரியளவில் இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் வழங்குவதால், கோழித் தீனியின் விலை அதிகரித்துள்ளதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.