நாட்டில் தற்போது உச்சம் பெற்றுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் மின்விநியோக தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணப்படும்.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி காரணமாக சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
அதன் காரணமாக சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 ஆம் திகதி மூடப்பட்டது.
சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையினால் மின்நிலையங்களுக்கு தேவையான உராய்வு எண்ணெயை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்ட காரணத்தினால் மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின்நிலையமும், நீர்மின் உற்பத்தி நிலையமும் வழமை போன்று செயற்படவுள்ளதால் எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோகத்தை தடையின்றி வழங்க முடியும். எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம்.
டொலர் நெருக்கடி காரணமாகவும்,மின்பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாலும் தேசிய மின்விநியோக கட்டமைப்பில் பாரிய சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளன.
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதே பிரதான நோக்கமாக உள்ளது. மின்கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தனியார் தரப்பினரிடமிருந்து அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வது எமது நோக்கமல்ல என்றார்.