• Mon. Apr 6th, 2026

கரு ஜயசூரியவின் கூற்று அதிர்ச்சியளிக்கிறது – ரணில் விக்ரமசிங்க விசனம்

Byadmin

Jan 23, 2022

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு, கதிரைகள் தூக்கியெறியப்பட்டு சர்ச்சைக்குரிய அமைதியின்மை நிலையொன்று கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. 

அதனை நானும் தற்போதைய பிரதமரும் கலந்துரையாடித் திட்டமிட்டு நிகழ்த்தியதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியிருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், எம்மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஓரிரு குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் மாத்திரம் எமது கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டியிருக்கின்றது.

முதலாவதாக எமது கட்சிக்கு அறிவித்ததன் பின்னரே அவர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கின்றார். 

யுத்த நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதுடன் அதனை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மாத்திரமே அப்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடொன்று காணப்பட்டது.

அதேவேளை கரு ஜயசூரிய என்னிடம் கூறிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியைப் பெறவில்லை. 

அடுத்ததாக கடந்த பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாப்பிரேரணையில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறியிருக்கின்றார். 

ஆனால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.  

அதுமாத்திரமன்றி எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு இடமளித்து, அவர்களைக் களைப்படையச்செய்யுமாறு நான் கூறியிருப்பதுடன் அது நாங்கள் இருவரும் கையாண்ட உத்தியாகும்.

மூன்றாவதாக கடந்த பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு, கதிரைகள் தூக்கியெறியப்பட்டு சர்ச்சைக்குரிய அமைதியின்மை நிலையொன்று ஏற்பட்டது. 

அதனை நானும் தற்போதைய பிரதமரும் கலந்துரையாடித் திட்டமிட்டு நிகழ்த்தியதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டிருக்கின்றார். 

இவ்விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நேர்காணலில் அவர் எனது பெயரை நேரடியாகக் கூறியிருக்காவிட்டாலும், நேர்காணலை நடத்தியவர் எனது பெயரை குறிப்பிட்டுக் கேட்கின்றபோது கரு ஜயசூரிய அதனை மறுதலிக்கவில்லை. 

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. 

அரசியலமைப்பு சதி முறியடிக்கப்பட்டு, நாங்கள் மீண்டும் பிரதமர் மற்றும் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனவரி மாதம் திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அக்குழுவின் ஊடாக திலக் மாரப்பன பொலிஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்று கூறப்பட்டது. 

இருப்பினும் அவ்வாறு உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்கவில்லை என்றும் மாறாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் அறிக்கையின் ஊடாகப் பரிந்துரைத்திருப்பதாகவும் திலக் மாரப்பன குறிப்பிட்டார். 

அந்த அறிக்கை பெப்ரவரிமாத இறுதியிலேயே சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் உயிர்த்த  ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் இடம்பெற்றன. 

எனவே அந்த நெருக்கடிக்கு மத்தியில் இவ்விடயத்தில் வழக்குத்தொடுப்பது நேரவிரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அதுகுறித்து பின்னர் அவதானம் செலுத்தலாம் என்று அப்போதைய எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கூறினார்கள். 

அது உண்மை என்பதால் நானும் அதற்கு உடன்பட்டேன். ஆகவே மேற்படி சர்ச்சைக்குரிய சம்பவத்தை நானும் தற்போதைய பிரதமரும் திட்டமிட்டு அரங்கேற்றியதாக கரு ஜயசூரிய கூறுவது அதிர்ச்சியளிக்கின்றது என்று குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *