வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் முதல் பத்து நாட்களுக்குள் சுமார் 30,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் கடந்த பத்து நாட்களுக்குள் இலங்கைக்கு மொத்தமாக 31,343 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதில் ஒரு நாளைக்கு சராசரியாக 3,134 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரையில் ரஷ்யாவிலிருந்து 4,566 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதோடு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,799 பயணிகளும் இந்தியாவிலிருந்து 3575 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரையின், போலாந்து மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.