(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தடுப்பூசி ஏற்றுவதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக எந்தவொரு ஆய்விலும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், தேசிய ஆயுர்வேத மருத்துவத்தை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் தடுப்பூசி ஏற்றுவதையே அரசாங்கம் பிரதானமாக கருதுகின்றது. கொவிட் மரணங்களில் 65 வீதத்திற்கு அதிகமானவை எந்தவொரு தடுப்பூசியும் ஏற்றாதவர்களின் மரணம் என்பது தரவுகளில் வெளிப்படுகின்றது.
ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களின் மரணமானது 18.2 வீதமாக பதிவாகியுள்ளதுடன், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டும் மரணித்தவர்கள் 15.7 வீதமாகும். மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மரணித்த வீதமானது 0.2 என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகியுள்ளது.
ஆகவே தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் மரண வீதம் குறைவானது என்பதே இதன் மூலம் வெளிப்படுகின்றது.
எனவே மரணங்களை குறைக்க பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டமை சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. எனவே மக்கள் தமக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.