• Sun. Apr 5th, 2026

மணல் விலை மலையளவு உயர்ந்தது, நிர்மாணத் தொழில்துறை முடங்கியது

Byadmin

Jun 22, 2022

மணல் விலை உயர்வு காரணமாக கொழும்பு, கம்பஹா மட்டுமன்றி நாடுபூராகவும் நிர்மாணத் தொழில்துறை முடங்கிப் ​போயுள்ளது.

மணல் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதால், நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளன.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த பகுதிகளில், ஒரு கியூப் மணல் 55,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக, கட்டுமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு பூராகவும் நிர்மாண மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான மணலில் 75 வீதம் பொலன்னறுவை – மனம்பிட்டிய மற்றும் மஹியங்கனை – மஹஓயா பகுதிகளிலிருந்தே விநியோகிக்கப்படுவதாக மணல் பாரவூர்தி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் டயர்கள் மற்றும் பிற கட்டணங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே தாம் மணல் விலையை உயர்த்த நேர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நான்கு கியூப் மணல் 150,000 ரூபாவிற்கும் கடுவெல, பெலும்மஹர மற்றும் கடவத்தைக்கு 95,000 ரூபாவிற்கும் வழங்கப்படுவதாக மணல் லொறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நுகேகொடை, கல்கிசை, மஹரகம, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் ஒரு கியூப் மணலை 55 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர்.

கொழும்பை அண்டிய ஏனைய பகுதிகளில் ஒரு கியூப் மணல் 50 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *