• Sun. Oct 12th, 2025

ஓடும் ரயிலில் அதிகாலையில் இடம்பெற்ற கொள்ளை

Byadmin

Oct 10, 2022

ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பண பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் நேற்று முன்தினம் (06) அதிகாலை கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் இடம்பெற்றுள்ளது. வாள் உட்பட கூரிய ஆயுதங்களுடன் ரயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பியோடிய போது, ஒருவரை காயங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 05.30 மணியளவில் அங்குலான ரயில் நிலையத்தை கொழும்பு – மாத்தறை ரயில் அண்மித்துள்ளது. இதன்போது கொள்ளையர்கள் இருவரும் ரயிலில் ஏறியுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த ஒரு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த கணவன் மற்றும் மனைவியை அச்சுறுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் கணவனின் பணப் பையை பெறுவதற்கு கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அதற்கு கணவன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது அவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதன்போது மனைவியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து கணவனின் பணப்பையை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.பின்னர் ரயிலிருந்த ஏனைய பயணிகள் குறித்த பெட்டிக்குச் சென்றபோது கொள்ளையர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து குதித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது.

மொறட்டுவை பொலிஸார் கொள்ளையர்கள் குதித்த இடத்துக்கு விரைந்துள்ளனர். இதன்போது ரயிலிருந்து குதித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக கொள்ளையர்களில் ஒருவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மற்றைய சந்தேக நபர் தங்கச் சங்கிலி,2 இலட்சம் ரூபா பணப் பையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.மொரட்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மன்னாரிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினரே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தம்பதியினர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்து சந்தேக நபரான கொள்ளையருக்கும் பொலிஸ் காவலில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் போதைப்பொருளுக்கு அடிமையான பல குற்றச் செயல்களுக்காக விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்றவர் என தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *