• Tue. Apr 7th, 2026

DAT பிரச்சினையை தீர்க்க விசேட குழு நியமனம்!

Byadmin

Feb 19, 2024

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர்  வைத்திய ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கலந்துரையாடலில் சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பிலான பிரேரணையை தயாரித்து அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதனை பரிசீலித்த பின்னர் அதிகபட்ச நியாயத்தை எட்டுவதற்கு சுகாதார அமைச்சு செயற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் தலைமையில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ளனர்.
அதற்கு இணக்கம்  தெரிவித்த அமைச்சர், குழுவை அமைத்ததுடன், அந்தக் குழு நாளை (20) பிற்பகல் 3 மணிக்கு கூடி எதிர்கால தீர்மானங்களை எடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *