• Mon. Oct 13th, 2025

மதுபோதையில் வாகனம் செலுத்தல் – பொலிஸாரின் தீர்மானம்

Byadmin

Dec 26, 2024

இனிமேல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் கைது செய்யப்படும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தி அல்லது இரத்து செய்யுமாறு நீதிமன்றில் பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 24 மணி நேரத்தில், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 120 சாரதிகளும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,262 சாரதிகளும், அனுமதிப்பத்திர தவறுகள் தொடர்பில் 682 சாரதிகளும்,வேறு வகையான போக்குவரத்து தவறுகள் தொடர்பில் 5,441 சாரதிகளும் உள்ளடங்களாக 7,950 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையை பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *