• Sat. Oct 11th, 2025

தென்கொரியாவில் விபத்துக்குள்ளான விமானம்

Byadmin

Dec 29, 2024

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்ததும் மோசமான வானிலையும் விபத்துக்குக் காரணம் என்றும் தீயணைப்புத் துறை சந்தேகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *