• Fri. Nov 28th, 2025

சுதந்திர தின நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம்

Byadmin

Jan 30, 2025

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில் வெகுவிமர்சையாகவும் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் இம்முறை சுதந்திர தினநிகழ்வை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த, சுதந்திர தின அணிவகுப்பின் அமைப்புகள் சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த ஆண்டு இராணுவ அணிவகுப்பு 1,873 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 1,511 இராணுவ உறுப்பினர்களினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் கவச வாகனங்கள் பயன்படுத்தப்படாது என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் 25 துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், கடந்த முறை பயன்படுத்தப்பட்ட 19 விமானங்களில், இந்த முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 3 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *