தடை செய்யப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டும் வேலைத் திட்டம் காத்தான்குடியில் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (11) மேற் கொள்ளப்பட்டது
கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன் தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
40 பேர் கொண்ட அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து ஹோட்டல்கள், பல சரக்கு கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விழிப்புணர்வை மேற் கொண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரத்தையும் விநியோகம் செய்தனர்.
இதன் போது 45 வர்த்தக நிலையங்களுக்கு அதிகாரிகள் சென்று சோதனை செய்ததுடன் விழிப்புணர்வையும் மேற் கொண்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன் தெரிவித்தார்.