ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை பேரழிவுகரமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலுடன் குறிவைத்துள்ளோம்.
இந்த தளம் அமெரிக்க விமானப்படையின் தலைமையகமாகவும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் மிகப்பெரிய சொத்தாகவும் உள்ளது. ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் தேசத்தின் மகன்களின் தீர்க்கமான இந்த நடவடிக்கை பற்றிய செய்தி வெள்ளை மாளிகைக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு, எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது. இந்த நடவடிக்கை எங்கள் நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் உன்னத மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.