• Sat. Apr 4th, 2026

பல வருடங்களாக சவுதி அரேபியா வழங்கிய, வெற்றிகரமான ஒத்துழைப்பைப் பாராட்டிய இலங்கைத் தூதுக்குழு

Byadmin

Feb 12, 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்பு கண்காட்சிக்கு இணையாக இச்சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீண்டகால உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பல வருடங்களாக சவுதி அரேபியா வழங்கிய வெற்றிகரமான ஒத்துழைப்பைப் பாராட்டிய இலங்கைத் தூதுக்குழுவினர், அந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்தனர்.

இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையிலான இராணுவப் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல், தொழில்முறை பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியான அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பொருட்கள் போக்குவரத்து போன்ற எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து அவர்கள் தமது பரஸ்பர கவனத்தைச் செலுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகிறது.

இந்தச் சவால்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள வகையில் போராடுவதற்கு, இருதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு, துல்லியமான புலனாய்வுத் தகவல் அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு திறன்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப முறைகள் மற்றும் வளர்ந்து வரும் நடவடிக்கை எண்ணக்கருக்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணையாக முன்னோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மேலும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *