• Wed. Apr 8th, 2026

சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்

Byadmin

Dec 14, 2025

(சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்)

தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரபாண்டியன் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை குறித்து விளக்குகிறார்.

தீட்டிய அரிசி :

கடந்த காலங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே சிறுநீரக பாதிப்பு வரும். தற்போது, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூட சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள். சிறுநீரக பாதிப்புக்கு சர்க்கரை நோய் ஒரு முக்கிய காரணமாகும். சர்க்கரை நோய்க்காக சிகிச்சைக்கு போனால் மருத்துவர்கள் அரிசி உணவை குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

நமது முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியை உண்டார்கள். சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், நாம் இன்று தீட்டிய அரிசியை சாப்பிடுகிறோம். இந்த தீட்டிய அரிசி என்பது அரிசி மணியின் மேல்புறத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துகளும் நீக்கப்பட்ட சர்க்கரை மட்டுமே. எந்த சத்துகளும் இல்லாத இந்த தீட்டப்பட்ட சர்க்கரை அரிசியை உண்டு வந்தால் உடலில் சர்க்கரை உயரும். சத்து நிரம்பிய கைக்குத்தல் அரிசியையும் சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைவு. இதனால், சர்க்கரை நோய் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.

பாக்கெட் உப்பு தப்பு :

சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவர்கள் நோயாளியிடம் உணவில் உப்பு சேர்ப்பதை நிறுத்தச் சொல்வார்கள். நாம் உண்ணத் தகுந்த உப்பு என்பது கடலில் இருந்து நேரடியாக கிடைக்கும் பழுப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை உப்பு. இதில் மாங்கனீஸ், பொட்டாஷ் உள்பட உடலுக்கு மிகத்தேவையான சத்துகள் இருக்கின்றன. இந்த உப்பு வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்று பாலிஸ் செய்து சத்துகளை நீக்குகிறார்கள். கடைசியில் மிஞ்சுவது சோடியம் குளோரைடு உப்புதான். இந்த சத்தற்ற உப்பையே நாம் பயன்படுத்துகிறோம். இது அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் போது சிறுநீரகம் பழுதடையவே செய்யும். தீட்டப்படாத பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

கசக்கும் சர்க்கரை :

நமது முன்னோர்கள் கரும்புச்சர்க்கரையை பயன்படுத்தினார்கள். இது உடலுக்கு நன்மை தரும். இன்று இந்த சர்க்கரையில் உள்ள சத்துகளை நீக்கி விட்டு சீனியாக விற்பனை செய்கிறார்கள். இந்த சீனி உடலில் சர்க்கரை அளவை உயர்த்தும். சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்புகளை உருவாக்கும். சீனியை தவிர்த்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம். சீனிக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

புதிய புதிய எண்ணெய் :

பல காலங்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினர். இவை இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட ஜீவ உறுப்புகளை பலப்படுத்துபவை. குறிப்பாக, இவை இதயம் தொடர்பான நோய்களை தடுக்க வல்லவை. இவற்றை விட்டு விட்டு சந்தையில் கிடைக்கும் புதிய புதிய தாவர எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறோம். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

எனவே, சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு வரும் முன் தடுக்க மற்ற எல்லாவற்றையும் விட உணவு முறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இதன் மூலம் உடலின் சீரான இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யலாம். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான நோய்களை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *