அழிவடையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
183 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்று சூழல் அமைப்புகள் உலகளாவிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நாலாயிரத்தை அண்மித்தோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்..
மாநாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவின் தலைமையில் நேற்று(17) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.