(இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதரத்துடன் நிரூபிப்பேன்.)
புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -09- இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது பேசிய அவர்,
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதரத்துடன் நிரூபிப்பேன். இன்று சுப்பர் மார்க்கட்களில் உள்நாட்டு பால்மாக்களை மறைத்துவைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை மாத்திரம் மக்களின் நுகர்வோரின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று சிறுவர்களின் இனிப்புப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில்தான் சிகரட் பெட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளை நிறுத்த எமது நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதேவேளை, புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். ஆனால் யுத்தத்தின்போது நாளொன்றில் சுமார் 40 பேரே மரணித்துள்ளனர். அதனால் விடுதலை புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும்.