(இலங்கை முஸ்லிம்கள் மீதான, தாக்குதல் நம் அனைவர் மீதுமான தாக்குதலாகும் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் )
கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பயங்கரவாதத்தை விரைவில் கட்டுப்படுத்த முடிந்ததாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 41வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இதேபோன்று இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் தலைவர்களும், சமயத் தலைவர்களும் ஏனைய தேசிய அமைப்புகளின் தலைவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய பங்களிப்பு பாராட்டப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார். சிறுபான்மை சமயத்தவர்கள் மீதான தாக்குதல் நம் அனைவர் மீதுமான தாக்குதலாகும்.
எவ்வாறாயினும், சமய நம்பிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழமான மனித விழுமியங்களையும், மனித பிணைப்புக்களையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கான பிரதான காரணிகளை கண்டறிந்து தீர்ப்பதற்காக அரசியல், சமய மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.