• Sat. Apr 4th, 2026

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?

Byadmin

Jul 23, 2019

(50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?)

ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்தது எப்படி? என்பதை பார்ப்போம்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட்(9) எனும் சிறுவனுக்கு,  கடற்கரை மணலில் புதைந்த பாட்டில் கிடைத்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் எடுக்கச் சென்றான்.

அருகே சென்று எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது கடிதம் என்று. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் 17ம் தேதி, 1969ம் ஆண்டு என இருந்தது.

கடிதத்தை மேலும் படித்தபோது அந்த கடிதம், ‘இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னுக்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன். யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள்’ எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் பால் கில்மோரோ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோவுக்கு, எலியட் பதில் அனுப்ப நினைத்தான். கடிதம் எழுதியவரை கண்டறிய முடியுமா? என தனது தந்தையிடம் கேட்டுள்ளான். சமூக வலைத்தளங்கள் இருக்கும்போது இந்த கேள்வி தேவையில்லை என கூறி கில்மோரோவை தேட ஆரம்பித்தார். 

இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யவே, படுவேகமாக ஷேர் செய்யப்பட்டு இறுதியாக கில்மோரோவை சென்றடைந்தது. படுஷாக் ஆனார். இது குறித்து கில்மோரோ கூறுகையில், ‘விளையாட்டாக எழுதி கடலில் வீசினேன். ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டுகள் இருந்தோம்.

அதன்பின்னர் மீண்டும் இங்கிலாந்திற்கே சென்று விட்டோம். சமீபத்தில்தான் என் மனைவியிடம் இது பற்றி கூறினேன். இப்போது அதற்கு பதில் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி’ என கூறியுள்ளார். கில்மோரோவுக்கு இப்போது 63 வயதாகிவிட்டது. அவர் ஆங்கில ஆசிரியராக இருந்து ஓய்வுப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *