(எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.)
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 53,384 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட பிரதேச தொகுதியில் 2001 ஆம் ஆண்டு ஒரு தடவை மட்டுமே UNP வென்றுள்ளது. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திர கட்சியின் கூட்டமைப்பு வென்றுள்ளது.
ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 5 முதல் 7 தேர்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையங்களில் தலா 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.