நாட்டில் நிறைவடைந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் எவ்வித இடையூறும் இன்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த சுகாதார தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.
எனினும் பொலிஸாரின் உதவியுடன் அதனை முகாமைத்துவம் செய்ய முடிந்தது. இதேபோன்று பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளின் உதவியும் கிடைக்கப் பெற்றது.
தற்போது பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 7 பாடசாலைகள் மாத்திரம் மூடப்பட்டிருக்கும்.
அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கேகாலை வித்தியாலயம், கண்டி – கிங்ஸ்வூட் வித்தியாலயம், கண்டி – சீதாதேவி பெண்கள் பாடசாலை, காலி – வித்தியாலோக மகா வித்தியாலயம், பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.
அதே போன்று புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கான ஏற்பாடு;கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் 294 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர். இவர்களுக்காக 29 பிரத்தியேக பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றார்.