எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவைக்கதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதாலேயே எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பும். தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல் நிலைமைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு 4000ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கும். ஆனால் தற்போது கூட்டுத்தாபனம் நாளாந்தம் 7 ஆயிரம் அல்லது 8ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை விநியோகித்தும் எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்வதால் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும்.
தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.
சர்வதேச தர நிர்ணயத்திற்கமையவே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்