• Mon. Apr 6th, 2026

பதுக்கி வைத்திருப்பவர்களை, பாய்ந்து பிடியுங்கள் – ஜனாதிபதி உத்தரவு

Byadmin

Jun 18, 2022

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதுமான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து கடன் பத்திரங்களை வௌியிடுவதற்காக நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு, விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால எரிபொருள் விநியோக உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போதுள்ள எரிவாயு இருப்புக்களை முறையாக விநியோகிப்பது மற்றும் போதுமான எரிவாயு இருப்புக்களை விரைவாக கொள்வனவு செய்வது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *