• Sat. Oct 11th, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய ‘Duty Free’ கடைகள் திறப்பு அநீதி செய்தால் ஒப்பந்தம் ரத்து

Byadmin

Jan 3, 2023

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்ளக அபிவிருத்தி பணி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலத்திரனியல் வரிச்சலுகை வளாகம் இன்று (03) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இக்கடைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வேலைக்காக சென்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு, விமான நிலையத்தின் வருகை முனையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் பொருட்களைக் கொண்ட இந்த வணிக வளாகங்கள் மூலம் தரமான இலத்திரனியல் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்று விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கடைத்தொகுதி 31 கடைகளகை கொண்டுள்ளதோடு, மக்களுக்கு உச்சபட்ச தரமான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கப்படும் இந்த வர்த்தகக் கடைத் தொகுதி மூலம் விமான நிலைய நிறுவனம் சுமார் 30 மில்லியன் ரூபா மாத வருமானத்தை எதிர்பார்க்கிறது.

இந்த வர்த்தக வளாகத்தை திறந்து வைத்து அமைச்சர் உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா, கடந்த காலங்களில் விமான நிலையத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வாடிக்கையாளர்கள் பாரிய அநீதிகளை எதிர்நோக்க நேரிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை. இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் உடனடியாக குத்தகையை இரத்து செய்ய விமான நிலைய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விமான நிலைய நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *