• Sun. Oct 12th, 2025

எனது பந்துவீச்சை அடித்து பார்க்கட்டும்- நிக்கோலஸ் பூரனுக்கு ஹர்திக் பாண்ட்யா சவால்

Byadmin

Aug 9, 2023

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது. பிரெண்டன் கிங், 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோமன் போவெல் 19 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 83 ரன்னும் (10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 37 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் 2 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றது. இதில் தோற்று இருந்தால் 20 ஓவர் தொடரை இழந்து இருக்கும். வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:- இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது என்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பேசி இருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு விளையாடினோம். நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததால் எங்கள் பந்து வீச்சாளர்களை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக அக்ஷர் படேலுக்கு அவருக்கு உரிய 4 ஓவர்களையும் முழுமையாக வழங்க முடிந்தது

நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க நினைத்தால் எனது பந்தில் அடித்துக் கொள்ளட்டும் என்றே நான் காத்திருந்தேன். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும். 7 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இந்த திட்டம் தவறாக போகும் பட்சத்தில் அதற்கு நாங்கள் தான் பொறுப்பாகும். முதல் 7 பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை சரியாக செய்து விட்டால் 8-வது வீரருக்கு வேலை இருக்காது என்பதே எனது கருத்தாகும். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மாவும் மிக சிறப்பாக விளையாடினார். இவ்வாறு அவர் கூறினார். 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *