வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றுமுதல் (27) சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் பேருந்து தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்கள் அதிகமாக காணமுடிகிறது என, பொது மக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை அளித்து வந்தனர். என்றாலும், இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் கடந்தகாலத்தில் எடுக்கப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் பொது இடங்களில் வெற்றிலை உண்டு எச்சில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.
வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் துப்பும் நபர்களுக்கு எதிராக குறைந்தப்பட்சம் 3,000 ரூபாவும் அதிகபட்சமாக 25,000 ரூபாவும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக பேருந்து சாரதிகள், மற்றும் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வெற்றிலை எச்சிலை பாதைகளில் துப்பிச் செல்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் கூறியதுடன், சாரதிகள், பயணிகள் உட்பட பாதசாரிகளுக்கும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.