(பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பண நிகழ்வும் மகிந்தவின் முழு உரையும்.)
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் நாட்டை சீரழிவின்பால் இட்டுச் செல்கிறது. அதிலிருந்து நாட்டைப்பாதுகாப்பதற்கே பொதுஜன பெரமுன தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் நடத்துவதற்கு பொதுஜன பெரமுனவிற்கு மாத்திரம் உரித்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் எப்போதுமில்லாதவாறு தற்போது ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஆனால் எமது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தியையும் நல்லாட்சியில் காணமுடியாதுள்ளது. அனைத்து அபிவிருத்திப்பணிகளையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. எனினும் தாராளமாக அரசியல் பழிவாங்கல் இடமபெற்றுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்கிறோம். எனினும் வழமைபோன்று இம்முறை தேர்தலை எதிர்கொள்ளவில்லை. தேர்தலுக்காக நீண்ட போரட்டம் நடத்தப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சி அதில் மிகுந்த சிரத்தையை எடுத்துக்கொண்டது.ஆகவேதான் இரண்டரை வருடப் போராட்டத்தின் பின்னர் தேர்தலை எதிர்கொள்ள முடிந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியை எம்மால் மறக்க முடியாது. ஏனெனில் அன்றுதான் நாம் தோல்வியைச் சந்தித்த தினமாகும். மேலும் அத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரே தோல்வியைச் சந்தித்தார் என்ற பாடத்தையும் மறந்துவிட முடியாது.
ஆயினும் அத்தோல்வி ஏற்பட்டு64 நாட்களின் பின்னர் மீண்டும் நாம் எமது பலத்தை நிரூபிக்கத் தொடங்கினோம். மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது எதிர்கட்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என நாம் கேட்டுக்கொண்டோம்.
எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பு அதற்கு உடன்படாது ஐக்கிய தேசிக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பங்குதாரராகி ஐக்கிய தேசியக் கட்சிக் கொள்கைக்குள் சங்கமமானது. அதன் விளைவாக தேசிய சொத்துகள் வகைதொகையின்றி விற்கப்படுகின்றன.மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு உட்பட இன்னோரன்ன நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
மேலும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகச் செயற்படுபவர்களுக்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலதாமத்திற்கு அரசாங்கம் மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
அத்துடன் எமது ஆட்சி காலத்தில் நாம் எதற்கும் அஞ்சவில்லை. யுத்தத்தை முடித்துக் காட்டுவோம் என்றோம். அவ்வாறு 30 வருட கால யுத்தத்தை நிறைவுசெய்து காட்டினோம். ஜி.எஸ்.பி.வரிச் சலுகை நீக்கப்பட்ட போதிலும் அதனை பொருட்டாகக் கருதாது நாட்டில் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்ததுடன் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் பால் நாட்டை கொண்டுசென்றோம்.அப்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் வகையில் பொருளாதாரம் காணப்பட்டது.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் ஒன்றையும் தெற்கில் மற்றொன்றையும் குறிப்பிட்டு வருகிறது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என தெற்கில் குறிப்பிடுகின்றனர். எனினும் சில அரசியல் வாதிகள் சமஷ்டியையும் விட அதிகளவானனதை பெற்றுத் தருவதாக வடக்கில் குறிப்பிடுகின்றனர்.
மத்தளயில் விமான நிலையம் அமைத்தோம். அப்போது எதிர்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அவ்விமான நிலையத்தை பெறுமதியற்ற விமான நிலையம் எனக் கருதியது. எனினும் தற்போது அப்பெறுமதியற்ற விமான நிலையத்தை கோடிக்கணக்கான ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.எமது அபிவிருத்தியில் மத்தள விமான நிலையத்துடன் மாத்திரம் நிறுத்திக் கொள்வது இலக்கல்ல. அதற்கடுத்த படியாக இரண்டாவது விமான நிலையம் அமைப்பதும் இலக்காக இருந்தது.
ஆகவே முழுஅளவில் நோக்கும் போது நாடு தற்போது அராஜக ஆட்சி நோக்கிப் பயணத்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது. எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து சீரழிவுப்பாதையை நோக்கி கொண்டு போகும் பயணத்தைத் தடுத்து நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவை அமைத்துள்ளோம்.
இக் கட்சி உள்ளீராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதனையும் மகிழ்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
மேலும் தேசிய அரசியலை எடுத்துக்கொண்டால் சகலரும் எனது புகைப்படத்தை காண்பித்தே அரசியல் நடத்துகின்றனர். அவ்வாறானவர்களுக்கு எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் நடத்துவதற்கு அருகதையில்லை. தாமரை மொட்டு சின்னத்தைக்கொண்ட பொதுஜன பெரமுனவிற்கே எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் செய்வதற்கு உரித்து உள்ளது.
பொதுஜன பெரமுனவினூடாகப் போட்டியிடுவதற்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். எனினும் சுமார் எட்டாயிரம் பேரே வேட்புமனுவில் இடம்பிடித்துள்ளனர். ஆகவே தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாது நாட்டுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.