(இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்)
பொதுமக்கள் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து சேவைகளையும் மேற்கொள்வதற்கான இலத்திரனியல் மயமான உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் இன்று(29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடனும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(29) இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ் வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் உள்ள உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. முதல் கட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை, 30 உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பொதுமக்கள் கட்டணங்களை செலுத்தும் போதும் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதிலும் இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் பணிகளை முறையாகவும், செயற்திறனாகவும் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் என்று மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் வசதிகள் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
பொதுமக்கள் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு செலுத்தும் அனைத்து கட்டணங்களையும், இணையத்தள இலத்திரனியல் அட்டைமூலம் மேற்கொள்வதற்கும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்காக இந்த ஈ-உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.