(முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை – ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்)
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலையின் ஆசிரியைகள் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் நேற்று முன்தினம் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றுக் காலை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம்கள் அச்சுறுத்தியதாக நான் கூறவில்லை
சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளோ அல்லது அவர்களது கணவன்மாரோ என்னை அச்சுறுத்தியதாக நான் யாரிடமும் கூறவில்லை. அவ்வாறான சம்பவம் நடக்கவும் இல்லை என திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எமது நிலைப்பாடுகள் வேறுபட்டதாக இருக்கின்ற போதிலும் நாங்கள் முஸ்லிம் ஆசிரியைகளுடன் புரிந்துணர்வுடனேயே நடந்து கொள்கிறோம். முஸ்லிம் ஆசிரியைகளும் எம்முடன் நட்புடனேயே உள்ளனர். என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. நான் அவ்வாறு யாரிடமும் கூறவுமில்லை. முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்றும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
-அப்துல் சலாம் யாசீம்-