(பத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள்)
அரசாங்கம் புதிதாக அமைச்சரவை மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், கொழும்பு மா நகர நிர்வாக எல்லையில் தற்போது இயங்கிவரும் அனைத்து அரச நிறுவனங்களும், விரைவில் பத்தரமுல்லை நிர்வாக நகருக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
பத்தரமுல்லை நிர்வாக நகரில் ஏற்கனவே 113 அரச நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தற்போது கொழும்பில் இயங்கிவரும் அரச நிதி பேரங்களுடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய சகல அரச நிறுவனங்களும் பத்தரமுல்லைக்கு இடம் மாற்றம் செய்யப்படும்.
இதன்பிரகாரம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் அலுவலகம் என்பன கொண்டு செல்லப்படும். அத்துடன், மேல் மாகாண அனைத்து அமைச்சுக்களும் அங்கு எடுத்துச் செல்லப்படும்.
பத்தரமுல்லை – செத்சிறிபாய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பூர்த்தியானதன் பின்னர், ஏனைய அரச நிறுவனங்களும் அங்கு கொண்டு செல்லப்படும்.
கொழும்பு மா நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக, பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
-ஐ. ஏ. காதிர் கான்-