(எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்)
எகிப்தில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியதையடுத்து அதிபர் அப்தெல் பாட்டா அல்-சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத்தின்படி இணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.