(இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை … )
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பலப்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன் நாட்டின் 11 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தளம், குருணாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று உஷ்னமான காலநிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை அதிக நீர் பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்து நிற்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்களில் புத்தளத்தில் பகல் வேளையில் 4 சென்டிகிரேட் வெப்பமும் அனுராதபுரம், யாழ்ப்பாணம், மற்றும் குருணாகல் பகுதிகளில் பகல் வேளையில் 3 சென்டிகிரேட் வரையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை, காலி, மஹா இலுப்பல்லம, மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பம் 2 சென்டிகிரேட் வரை அதிகரித்துள்ளது.
பதுளையில் இரவு வேளையில் 5 சென்டிகிரேட் வரையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.