• Sat. Apr 4th, 2026

பச்சைப்பயறை இப்படி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தை பேணலாம்..!

Byadmin

Mar 2, 2026

(பச்சைப்பயறை இப்படி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தை பேணலாம்..!)

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும் கொண்டு உள்ளது. பொட்டாசியம், சுண்ணாம்பு சத்துகளும் அடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் மோதகம், கொழுக்கட்டை, லட்டு, பாயாசம், கஞ்சி, சாம்பார் போன்றவை செய்ய பச்சை பயிறை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

உடல் எடை குறைக்க:

உடல் எடையை குறைப்பதில் பச்சை பயிறு பிரதான பங்கு வகிக்கிறது. இது அதிக அளவு பசியைத் தாங்கும் சக்தி கொண்டது. எனவே குண்டானவர்கள் சிறுபயிறை ஒரு நேர உணவாக பயன்படுத்தலாம். அதனை சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி தின்பது குறையும். இதனால் அவர்களது உடல் எடை படிப்படியாக குறையும்.

ரத்தசோகையை தடுக்க:

பச்சை பயிறு ரத்தசோகையையும் தடுக்க வல்லது. இதனை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காக்கும்.

சிறுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். 8 அல்லது 10 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை காலையில் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


தாய்ப்பால் அதிகரிக்க:

முளைகட்டிய பாசிப்பயிறு – 1 கைப்பிடி
சர்க்கரை, ஏலக்காய் – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/2 கைப்பிடி

பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் குணமாக:

வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பாசிப்பயிறு மகத்தானது. இது காரத்தன்மையை கட்டுப்படுத்தும். அதனால்தான் அல்சர் ஏற்பட்டவர்களுக்கு பாசிப்பயிறு குழம்பு வைத்து கொடுப்பார்கள். அதுபோல் கூடுதலான இனிப்பு தன்மையையும் குறைக்கும். பாயாசம் திகட்டாமல் இருப்பதற்காக பாசிப்பருப்பைதான் சேர்ப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *