கடந்த சில நாட்களாக, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை அக்கரைப்பற்று மற்றும்பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
கதலி வாழைப்பழம் ஒரு கிலோகிராம் 150 ரூபாய்க்கும், ஆணை வாழைப்பழம் 120 ரூபாய்க்கும், செவ்வாழை 350 ரூபாய்க்கும், சீனி கதலி 120 ரூபாய்க்கும், கப்பல் அல்லது கோழி சூடன் வாழைப்பழம் 280 ரூபாய்க்கும், மொந்தன் வாழைப்பழம் 140 ரூபாய்க்கும், இதரை வாழைப்பழம் 130 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கதலி உள்ளிட்ட வாழைப்பழங்களுக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில், சந்தைக்கு அதிகளவு கதலி உள்ளிட்ட வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால், இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
கொரோனா அனர்த்தம் மற்றும் உரப் பிரச்சினை உள்ளிட்ட காரணத்தால் வாழை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு, கடந்த காலத்தில் விலை அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது.
எனினும், தற்போது அந்நிலையில் இருந்து வாழைப்பழ செய்கையாளர்கள் மீண்டு அறுவடை அதிகரித்துள்ள நிலைமையே, இந்த விலை சரிவுக்கு காரணம் என வாழைச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.
இது தவிர, கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளான மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வாழைப்பழங்கள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.