முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் தற்போது மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்க நிதி செலவிடப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர் தற்போது மேற்கொளும் செலவுகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட நிதியின் மூலமே மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியாக சில சலுகைகள் உண்டு என, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு பதிலளித்ததாகவும்,
குறித்த கருத்தை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்கு அரசாங்கம் பணம் செலவிடுவதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் மேலும் ஆராயவுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும், அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தின் மூலம் செலவிடப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும், திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.