வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி ஜின்னா மிகவும் வலியுறுத்தினார். அதன் பின்னரே பாகிஸ்தான் என்ற புதிய நாடு உதயமானது.
பாகிஸ்தானுக்கு 14-08-1947 அன்று விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இந்திய நாட்டுக்கு அதே நாளின் நள்ளிரவில்தான் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பாகிஸ்தான் நாட்டு மக்கள் தங்களது 70-வது சுதந்திர தின விழாவை இன்று மிகவும் எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணியில் இருந்தே வான வேடிக்கைகள், ஆட்டம், பாட்டம் என அங்கு கொண்டாட்டம் களைகட்டியது.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொண்டார். அங்குள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.