ஆப்பிரிக்காவின் மேற்குப்புற நாடான கினியாவை சேர்ந்தவர் மம்முது சஃபாயு பாரி, 25 வயதான ஏழை இளைஞர் இவருக்கு , எகிப்தின் புகழ்பெற்ற புராதன பல்கலைக்கழமான அல்-அஸார் பல்கலைக்கழகத்தில் (கிபி.670 இல் கட்டப்பட்டது) சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை.
ஆனால் அவருக்கு பல்கலைக்கழக கட்டணம் கட்டவோ, எகிப்து போக விமான டிக்கட் வாங்கவோ கூட வசதியில்லை, இருந்தபோதும் தன் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது அந்த மாபெரும் கல்விக்கூடத்தை கண்ணார கண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு எகிப்திற்கு கிளம்பிவிட்டார்.
இவரது குடும்பதாரும் நண்பர்களும் பைத்தியம் போல நடந்து கொள்ளாதே, போய் வேறு வேலையைப் பார் என இவரை கிண்டல் செய்ய, எதையும் பொருட்படுத்தாமல் கடந்த ஏப்ரல் மாதம் தனது மிதிவண்டிப் பயணத்தை தொடங்கிய அவர் , கினியாவில் இருந்து மாலி,புர்கினா ஃபஸோ, டோகோ,பெனின்,நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளை கடந்து நான்கு மாதத்தில் எகிப்தை அடைந்துவிட்டார்.
ஆப்பிரிக்க சஹாரா பாலைவன பிரதேச நாடுகளின் கொடும் வெய்யிலில் அவர் மிதிவண்டி மிதித்துக்கொண்டு வந்ததும், போகும் இடங்களில் உணவுக்கும் தண்ணீருக்கும், உறங்குவதற்கும், மிதிவண்டி சக்கரத்திற்கு காற்று நிறப்புவதற்கும் பட்ட சங்கடங்களை விடவும், விசா அனுமதியின்றி ஆறு நாடுகளை கடந்து வந்ததும் கூட தனக்கு கஷ்டமாக இல்லை, ஆனால் வரும் வழியில் சில நாடுகளில் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருந்த முஸ்லிம் போராளி குழுக்களிடம் தனது நிலையைக் கூறி தப்பித்து வருவதே பெரும் பாடாய் போனதாகவும், அவர்கள் வைத்திருந்த பெரிய பெரிய துப்பாக்கிகள் எப்போது என் மீது தோட்டக்களை இறக்குமோ என்ற பயத்தில் இருந்தபோது எனக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து ,பிழைத்துப்போ என உயிரோடு விட்டதே பெரிய காரியம் என கடவுளுக்கு நன்றி கூறுகிறார் அவர்.
இப்படி கினியாவில் இருந்து, சாலை வழியாக ஆறு நாடுகளை கடந்து 4,000 கிமீட்டர்கள் சிரமப்பட்டு ஒருவழியாக செப்,5 அன்று எகிப்துக்கு வந்து தனது பல்கலைக்கழகத்தை காண வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொண்ட மம்முதுவுக்கு கிடைத்த மாபெரும் பரிசு அதே பல்கலைக்கழகத்தில் அவருக்கு இஸ்லாமிக் ஸ்டடீஸ் படிக்க இடமும், படித்து முடிக்கும் வரை ஸ்காலர்ஷிப்பும் கொடுக்கப்பட்டதும் தான்.
மம்முதுவை பற்றி அல்’அஸார் பல்கலைக்கழக மாணவர்கள் உதவியுடன் அறிந்துகொண்ட அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைமை அதிகாரி மருத்துவர் நஹ்லா அல்’சைதி , மம்முதுவை அழைத்துப்பேசி அவருக்கு இச்சலுகையை வழங்கினார்.
அல்’அஸார் பல்கலையில் படிக்க சர்வதேச மாணவர்களை அவர் இதன் வாயிலாக அழைப்பு விடுப்பதாகவும், கல்விதாகம் உடைய யாருக்கும் இங்கே உதவித்தொகையும் அனைத்து மாணவர்களுக்கும் இங்கே உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பும் கொடுக்கப்படுவதாக அவர் தனது முகநூல் தளத்தில் செய்தி வெளியிட்டார்.
கனவிலும் நினைக்க முடியாத ஒன்றை நான் அடைந்திருக்கிறேன், மிகவும் சந்தோஷமான தருணங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என கினியா இளைஞர் மம்முது கூறியது மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.