• Sat. Apr 4th, 2026

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

Byadmin

Nov 30, 2024

நிலவும் வானிலை நிலைமைகள் மற்றும் வடக்கிலிருந்து உள்வரும் எல்லைக் குழப்பம் காரணமாக இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள தினசரி காற்றின் தர அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய காற்றின் தரக் குறியீட்டின் படி கொழும்பு நகரம் 108 முதல் 116 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் 112 முதல் 120இற்கு இடையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, பதுளை, திருகோணமலை உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு 100இற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்தோடு, 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் மாத்திரமே காற்றின் தர சுட்டெண் மிதமான மட்டத்தில் இருக்க முடியும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இலங்கையின் காற்றின் தர அறிக்கையின்படி, நேற்று (29) பல நகர்ப்புறங்களில் காற்று சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *