இலங்கை அரசினதும் சவூதி அரேபியா அபிவிருத்தி நிதியத்தினதும் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை தேசிய மருத்துவமனையில் “வலிப்பு நோய் சிகிச்சை நிலையம்” 8 மாடிகளைக் கொண்டது. சவூதி அரேபியாவின் 3963 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும் இலங்கை அரசு 645 மில்லியன் ரூபா செலவிலும் இப்பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையம் இன்று பிற்பகல் 04.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன, சவூதி அரேபியா துாதுவர் மற்றும் வருகை தந்துள்ள சவூதி அரசின் பிரதிநிதிகள் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்கப்படுகின்றது.
உலகில் வாழும் மக்களில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் வலிப்புநோயாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் வாராந்தம் 20 பேர் இந் நோயினால் பாதிக்கப்பட்டு பதியப்படுகின்றனர் என டாக்டர் சுனேத்திரா சேனநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் இதுபோன்ற நவீன வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இதுவே முதற்தடவையாக நவீன இயந்திரங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-vv