• Fri. Oct 24th, 2025

வங்காள விரிகுடாவில் உருவாகியது குறைந்த அழுத்தம்

Byadmin

Oct 24, 2025

பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று (24) காலை 5:30 மணியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை, அட்சரேகை 5 முதல் 18 வரையும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையும் உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள், ஒக்டோபர் 25-க்கு முன் அந்தக் கடற்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிடப்பட்ட கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், காற்றின் வேகம் மணிக்கு 55-65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்போது, அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ மாறக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *