வானிலை பற்றி அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு…
இன்று தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று(௦4) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்ட அமைச்சர், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணித்தியாலங்கள் இயங்கி சகல விடயங்களையும் அவதானித்து வருகின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டி இடர் நிலையை தணியச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும்; அமைச்சர் கூறியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் கருத்து வெளியிடுகையில், இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் அந்தமான் தீவுக்கு அருகில் உருவான காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறக்கூடும் என்று கூறியுள்ளார்.
இது சூறாவளியாக மாற வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்புவது அவசியம் எனவும் குறிப்பாக வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பங்களாதேஷை நோக்கி படகுகளை திருப்புவது நல்லதென அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.