• Wed. May 27th, 2026

உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரை

Byadmin

Jan 15, 2026

(உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரை)

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோசாக மாற்றி அமைக்கப்படுகின்றன. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக்கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்று அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரக கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், பரவலாக இருக்கும் நீரழிவு நோய் என இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.

குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை நோயாளியாக்குகிறோம். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும், வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும் நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும், கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துகள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய் மாரடைப்பு ஏற்படுகிறது.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டினுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் சூழலை உருவாக்குகிறது. காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்தினாலே போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சர்க்கரையின் தொந்தரவில் இருந்து முழுவதும் விடுபட்டவர்கள். ஆக, நாவிற்கு மட்டுமே இனிப்பைத்தந்து உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *