(நாட்டிலுள்ள சகல இன மக்களிடமும், விஜயகலா உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் – JVP)
அரசியலமைப்பை மீறும் வகையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மூவின மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு பிளவுபடுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் எனக் கூறியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர்.
எனவே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பை மீறும் வகையில் கூறிய கருத்தை நியாயப்படுத்த முடியாது. அதனை நியாயப்படுத்துவதானது பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
இந்தக் கருத்துக்குப் பொறுப்பேற்று நாட்டிலுள்ள சகல இன மக்களிடமும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்.
நாட்டின் சட்டம், நாடாளுமன்ற நிலையியல் கட்டளை என்பவற்றுக்கமைய அவருக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.