• Thu. Oct 23rd, 2025

ஒரு பில்லியன் ரூபா, நட்டஈடு கோருகிறார் அலி சப்ரி

Byadmin

May 17, 2021

போலி பிரசாரங்கள் மூலம் சமூகத்தில் எனது மதிப்புக்கு களங்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ள ‘ஜனநாயகத்துக்கான பிரஜைகள்’ என்ற அமைப்பிடம் ஒரு பில்லியன் ரூபா மானநட்டஈடு கோரி நீதி அமைச்சர் அலி சப்ரி தனது சட்டத்தரணியூடாக சம்மன் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சட்டத்தரணியூடாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

2021.05.10 ‘ஜனநாயகத்திற்கான பிரஜைகள்’ என்ற அமைப்பு நடத்தியிருந்த ஓர் ஊடகச் சந்திப்பில், அண்மைய இலங்கை வரலாற்றில் நடைபெற்றிராத சம்பமொன்று பலபிட்டிய நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.  பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் அங்குள்ள ஒரு வீட்டுக்குள் குண்டர்கள் புகுந்து வீட்டை சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்த வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ள வழக்கொன்றுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் நீதவானுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, பாதிக்கப்பட்டுள்ள தரப்புக்கு நிவாரணமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை வரலாற்றில் எந்தவொரு அமைச்சரும் இவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பி நிவாரணத்தை வழங்குமாறு கோரியிருக்கவில்லையென அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது முற்றிலும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். அவ்வாறு நான் எந்தவொரு கடிதத்தையும் அனுப்பவில்லை. அனுப்ப எண்ணவுமில்லை. நான் மிகவும் நேர்மையான ஒரு சட்டத்தரணியாகும். அதன் பிரகாரம்தான் தற்போது நீதி அமைச்சராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனது பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செய்தி தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி மற்றும் சமூக வலையத்தளங்களில் பரப்ப எடுக்கப்பட்டுள்ள முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலையத்தளங்களில் வைரலாகியுள்ளது. சமூகத்தில் இந்த போலி பிரசாரத்தால் ஏற்பட்டுள்ள களங்கத்துக்கு இழப்பீடாக ஒரு பில்லின் ரூபாவை வழங்குமாறு கோரி மானநட்ட வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது சட்டத்தரணியூடாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *