• Sun. Oct 12th, 2025

போலி கிரிப்டோ கரன்சியினால் 14 பில்லியன் ரூபா மோசடி – 8,000 பேர் ஏமாற்றம்

Byadmin

Oct 28, 2022

போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த புதிய நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சீன தம்பதியினர் மற்றும் இலங்கை பிரஜை ஒருவரினால் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு முதல் 8,000 பேர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் தெரிவு செய்யப்பட்ட நபர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று பிரசாரம் செய்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முதலீட்டாளர்கள் முதலீடுகள் மூலம் ஈட்டிய இலாபத்தை திரும்பப் பெற முயற்சித்தபோது, சந்தேக நபர்கள் பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மோசடிப் பிரிவில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தல்துவா தெரிவித்துள்ளார். 

நீண்ட விசாரணைகளின் பின்னர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சீன தம்பதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீன தம்பதியினர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தால்  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *