மியன்மாரில் சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், சிரியாவிலும், பலஸ்தீனிலும் ஏனைய அரபுலக நாடுகளிலும் வேறு நாடுகளிலும் இன்னல்படுகின்ற முஸ்லிம்களுக்கும் விடிவு கிட்டவேண்டுமென ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க கடமைப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பெருநாள் செய்தியில் மேலும் காணப்படுவதாவது,
நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தின் சிறப்பை வலியுறுத்தும் ‘ஈதுல் அழ்ஹா’ பெருநாளை பல்வேறு இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் உலக முஸ்லிம்கள் அனைவரும் வழமை போன்று அனுஷ்டிக்கின்றனர்.
இஸ்லாத்தின் இறுதிக்கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் யாத்திரிகர்கள் ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத்திருநாளை கொண்டாடும் இவ் வேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் இந்தத் திருநாளைச் சந்திக்கின்றோம்.
முஸ்லிம்களில் அநேகர் பிறந்து, வளர்ந்த நாடுகளிலேயே அநாதைகளாக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, வேறு நாடுகளில் சென்று தஞ்சமடையும் துர்ப்பாக்கிய நிலைமைக்கும் உள்ளாகியிருப்பதை இந்த வேளையில் நாம் மறந்து விட முடியாது. குறிப்பாக மியன்மாரில் சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், சிரியாவிலும், பலஸ்தீனிலும் ஏனைய அரபுலக நாடுகளிலும் இன்னல்படுகின்ற முஸ்லிம்களுக்கும் விடிவு கிட்டவேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
இலங்கையிலும் கூட சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையிலும், இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களில் அதிகமானோர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் கஷ்டப்படுவது இந்த பெருநாள் தினத்தில் எங்கள் கவனத்தை வெகுவாக ஈர்;க்கின்றது.
தேசிய அரசாங்கம் உருவாகி, நல்லாட்சி மலர்ந்துள்ள நிலைமையிலும், நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வினூடான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் நிம்மதியைக் பாதிக்;கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுவது கவலைக்குரியது.
தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும் ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈத் முபாரக்!
ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்