அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளைப் பீடத்தின் (INDOPACOM) கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ புதன்கிழமை (19) அன்று இலங்கைஙை வந்தடைந்துள்ளார்.
இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என அமெரிக்கத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவின் விஜயம் தொடர்பில் மேலும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிடுகையில்,
நீண்டகாலமாக நீடிக்கும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வையினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனும், இராணுவத் தலைவர்களுடனும் அட்மிரல் பப்பாரோ பல சந்திப்புகளை மேற்கொள்வார்.
அத்துடன், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்குமான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை- அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்க இந்தோ – பசிபிக் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ளவும் கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவை வரவேற்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.